இரண்டு மாநகராட்சி பள்ளிகள் 'சிட்டிஸ்' திட்டத்தில் மேம்பாடு
சென்னை மாநகராட்சியின் இரண்டு பள்ளிகளை, சிட்டிஸ் திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் பணி, விரைவில் துவங்க உள்ளது.பிரான்ஸ் மேம்பாட்டு முகமை நிதி உதவியுடன், சென்னை மாநகராட்சி பள்ளிகளை, உலக தரத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்கும், 'சிட்டிஸ்' திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு, 95.25 கோடி ரூபாய். இதில், 76.2 கோடி ரூபாயை, பிரான்ஸ் மேம்பாட்டு முகமை அளிக்கும். மீதமுள்ள தொகை, மத்திய, மாநில அரசுகள் இணைந்து வழங்கும்.
இதன்படி, பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவது, ஆசிரியர்களுக்கு கற்பிக்கும் திறனை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்பட உள்ளன.
இந்த திட்டத்தின் படி, சென்னை மாநகராட்சி பள்ளிகளில், 46 பள்ளிகள் சீரமைக்கப்பட உள்ளன. இதில், முதற்கட்டமாக, கொரட்டூர் மற்றும் சிமிட்ரி சாலை ஆகிய பகுதிகளில் உள்ள, இரண்டு மாநகராட்சி பள்ளிகளை சீரமைக்கும் பணி, விரைவில் துவங்க உள்ளது
.இதுகுறித்து, ஸ்மார்ட் சிட்டி நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
இத்திட்டத்தில், சென்னையில் உள்ள பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும். மேலும், டிஜிட்டல் முறையில் கல்வி கற்கும் திட்டம் செயல்படுத்தப்படும். ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும்.
குறிப்பாக, மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இடையில், விளையாட்டு மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் திட்டம் அமல்படுத்தப்படும்.
இதன் வாயிலாக, மாநகராட்சி மாணவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து, அனைத்து போட்டிகளிலும் பங்கேற்க செய்யும் வகையில், அணிகள் உருவாக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment