புதிய ஊதியம் நிர்ணயிக்கணும் தொகுப்பூதிய பணியாளர் எதிர்பார்ப்பு
ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்களுக்கு, புதிய ஊதியம் நிர்ணயம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்' என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கான உள்ளடக்கிய கல்வி திட்டத்தின்கீழ், சிறப்பு தேவையுள்ள மாணவர்களுக்கு, சிறப்பு கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
இதில், சிறப்பு பயிற்றுநர்கள், தொழில்சார் பயிற்சியாளர்கள் மற்றும் பேச்சு பயிற்சியாளர்கள் என, 2,114 பேர் தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனர்.
இவர்களுக்கு, இ.எஸ்.ஐ., காப்பீடு என, எந்த சலுகையும் இல்லை.இவர்கள், தங்களின் சலுகை வேண்டி பலமுறை மனு வழங்கி வருகின்றனர். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஊர்தி படியை, ஆயிரம் ரூபாயில் இருந்து, 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். ஐந்து முதல், 10 ஆண்டு வரை பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
தொகுப்பூதிய பணியாளர்கள், புதிய ஊதியம் நிர்ணம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி, சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், முதல்வருக்கு மீண்டும் மனு வழங்கியுள்ளார்.
No comments:
Post a Comment