'தமிழக சட்டசபை தேர்தல் ஒத்தி வைக்கப்படுமா??
'தமிழகம், மேற்கு வங்கம் உட்பட, நான்கு மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட வாய்ப்பே இல்லை' என, தலைமை தேர்தல் கமிஷனர், சுனில் அரோரா குறிப்பிட்டு உள்ளார்.
'கொரோனா' பரவல் இருந்த நிலையிலும், பீஹாரில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதற்காக, தேர்தல் கமிஷனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இது குறித்து, தலைமை தேர்தல் கமிஷனர், சுனில் அரோரா கூறியதாவது:
கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்த நிலையில், பீஹார் சட்டசபைக்கு தேர்தல் தேதியை அறிவித்தோம்.
'இதென்ன முட்டாள்தனமாக இருக்கிறது' என, பல்வேறு தரப்பினரும் கூறினர். ஆனால், திட்டமிட்டபடி, சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், இந்த தேர்தல் வெற்றிகரமாக நடந்துள்ளது.
எந்த தேர்தலாக இருந்தாலும், அதை வெளிப்படையாக, அமைதியாக நடத்த, தேர்தல் கமிஷன் முழு முயற்சியையும் எடுக்கும். பீஹார் தேர்தலில் கூடுதல் பொறுப்பு ஏற்பட்டது. தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து, வெற்றிகரமாக நடத்தியுள்ளோம்.
அடுத்ததாக, அடுத்தாண்டு மே ~ ஜூன் மாதங்களில், தமிழகம், மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
அதற்கான ஆயத்த பணிகளை துவக்கி விட்டோம்.தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. திட்டமிட்டபடி, உரிய நேரத்தில், பாதுகாப்புடன், தேர்தல் நடக்கும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment