கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் விருப்பப் பாடம் என்பதை ஏற்க முடியாது:ஐகோர்ட் நீதிபதிகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, November 26, 2020

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் விருப்பப் பாடம் என்பதை ஏற்க முடியாது:ஐகோர்ட் நீதிபதிகள்

 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் விருப்பப் பாடம் என்பதை ஏற்க முடியாது:ஐகோர்ட் நீதிபதிகள்


கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் விருப்பப்பாடம் என்பதை ஏற்க முடியாது. தாய்மொழியில் கல்வி கற்பது அடிப்படை உரிமை என்று ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர்.


மதுரை, நரிமேட்டைச் சேர்ந்த பொன்.குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மத்திய அரசால் தமிழகத்தில் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வரை தமிழ் மொழியை கற்றுக் கொடுக்கவும், இதற்கு தேவையான தமிழ் ஆசிரியர்களை உடனடியாக நியமிக்கவும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். 


இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வக்கீல் அழகுமணி ஆஜராகி, ‘‘கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி 1 முதல் 10ம் வகுப்பு வரை தமிழ் மொழிப்பாடம் கட்டாயம் இருக்கவேண்டும். 


இதன்கீழ் சேரும் மாணவர்கள் பெரும்பாலும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள். இவர்களுக்கு இந்தி தெரியாது. தமிழ் ஒரு பாடமாக இல்லாததால் படிப்பதில் பெரும் சிரமம் உள்ளது.


 மத்திய அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மட்டும் தமிழ் மொழியை புறக்கணிக்கும் நிலை உள்ளது’’ என்றார்.


கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் விக்டோரியா கவுரி, ‘‘இப்பள்ளி இடமாறுதலில் செல்லும் மத்திய அரசு ஊழியர்களுக்காக துவக்கப்பட்டது. இங்கு படிக்கும் 50 சதவீதம் பேர் மத்திய அரசு பணியில் உள்ள பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 50 சதவீத மாணவர் சேர்க்கை அந்தந்த மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தே நடக்கிறது. 


தமிழ் விருப்பப் பாடமாக உள்ளது’’ என்றார்.  அப்போது நீதிபதிகள், ‘‘ஒரு நாட்டில் மொழிகளை வேறுபடுத்தி பார்க்கக்கூடாது. தாய்மொழியில் கல்வி கற்பது அவசியம். தாய்மாழியில் கல்வி கற்பது அடிப்படை உரிமை.


 ஒவ்வொரு மொழியும் உலகில் அவசியம். நமது தாய்மொழியை அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக கொண்டு சேர்க்கவேண்டும். தமிழகத்தில் பிரெஞ்ச், ஜெர்மன், பெங்காலி உள்ளிட்ட மொழிகளை விருப்பப்பாடமாக கற்கலாம்.


 ஆனால், தமிழ்மொழியில் பாடம் இருக்கக்கூடாதா? மத்திய அரசின் விளக்கம் ஏற்புடையதல்ல. தாய்மொழியை ஊக்கப்படுத்த வேண்டும் என்கிறார் பிரதமர்.


ஆனால், இந்தி மற்றும்   ஆங்கிலத்தை மட்டுமே படிக்க வேண்டும் என கட்டாயப் படுத்துகின்றனர். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் விருப்பப்பாடம் மட்டுமே என்பதை ஏற்க முடியாது. தமிழ் மொழிக்காக மட்டும் நாங்கள் கேட்கவில்லை.


 இந்தியாவிலுள்ள அனைத்து மாநில மொழிகளுக்கும் சேர்த்து தான் கேட்கிறோம். மின்னல் கல்விச்செய்தி இதே நிலை நீடித்தால், வரும் காலங்களில் தமிழ் மொழி தெரிந்திருந்தால் கேந்திரிய வித்யாலாயாவில் இடம் கிடைக்காது என்ற நிலை கூட உருவாகும். 


தாய்மொழியை விரும்பி கற்கும் ஜெர்மனி, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகள் நல்ல முன்னேற்றத்தில் உள்ளன’’ எனக்கூறிய நீதிபதிகள், மனுவுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி விசாரணையை இன்றைக்கு ஒத்தி வைத்தனர்

No comments:

Post a Comment