ஜனவரி 20 வாக்காளர் பட்டியல் வெளியீடு:விடுபட்டோர் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
சென்னை தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபைகளுக்கு, இந்தாண்டில் பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. அதற்காக, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
வரும், 20ம் தேதி வெளியாகும், வாக்காளர் பட்டியலில், பெயர் இருந்தால் ஓட்டு போடலாம். பெயர் விடுபட்டோர், 'ஆன்லைன்' வழியாக விண்ணப்பிக்கவும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, இம்முறை ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை, 50 சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளது.
தமிழக சட்டசபையின் பதவிக்காலம், மே, 24ல் நிறைவடைகிறது. புதுச்சேரி சட்டசபையின் பதவிக்காலம், ஜூன், 6ல் நிறைவடைகிறது.
எனவே, இரு மாநிலங்களிலும், ஏப்ரல் இறுதியில் அல்லது மே துவக்கத்தில், தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை, தேர்தல் கமிஷன் செய்யத் துவங்கி உள்ளது.
6.10 கோடி வாக்காளர்கள்
தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, நவம்பர், 16ல் துவங்கியது.
அன்றைய தினம், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, 3.01 கோடி ஆண்கள்; 3.09 கோடி பெண்கள், 6,385 திருநங்கையர் என, மொத்தம், 6.10 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில், நேரடியாக விண்ணப்பங்கள் பெறுவது, டிசம்பர், 15ல் நிறைவடைந்தது. வாக்காளர்கள் வசதிக்காக நான்கு நாட்கள், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
ஆன்லைன் வழியாகவும், விண்ணப்பங்கள் பெறப்பட்டன.டிச., 14 வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக்கோரி, 20 லட்சத்து, 62 ஆயிரத்து, 424; பெயர் நீக்கக் கோரி, 3.99 லட்சம்; திருத்தம் கோரி, 3.28 லட்சம்; முகவரி மாற்றக்கோரி, 1.83 லட்சம் என, மொத்தம், 29.72 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இவற்றை சரிபார்த்து, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது. வரும், 20ம் தேதி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அன்று வாக்காளர் பட்டியலில், பெயர் உள்ளதா என்பதை, பொது மக்கள் தெரிந்து கொள்ளலாம்.
வாக்காளர் பட்டியலில், பெயர் விடுபட்டோர்,
என்ற இணையதளம் வழியாகவும், ‛VOTER HELP LINE' எனும் 'மொபைல் ஆப்' வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.
கட்சிகள் பிரசாரம்
தேர்தல் கமிஷன், தேர்தலுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், அரசியல் கட்சிகளும், பிரசாரத்தை துவக்கி உள்ளன. தமிழகத்தில், சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, முதல்வர் இ.பி.எஸ்., தன் பிரசாரத்தை துவக்கி விட்டார்.
எனவே, தேர்தல் முன்கூட்டியே வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியதாவது:
கொரோனா காரணமாக, ஒரு ஓட்டுச்சாவடியில், 1,௦௦௦ வாக்காளர்கள் மட்டுமே, ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்படும். அதனால், 1,௦௦௦ வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகள், இரண்டாக பிரிக்கப்படும்.
எனவே, 67 ஆயிரமாக இருந்த, ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை, 95 ஆயிரமாக அதிகரிக்கும். ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதால், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மாநிலங்களில் இருந்து, கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எடுத்து வரப்பட உள்ளன.
கூடுதல் ஓட்டுச்சாவடிகளை அடையாளம் காண வேண்டி உள்ளதால், முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பில்லை.இவ்வாறு, சாஹு கூறினார்.
No comments:
Post a Comment