மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு: அரசுப் பள்ளி மாணவா் தொடா்ந்த வழக்கு தள்ளுபடி
மருத்துவப் படிப்பில் தமிழக அரசு வழங்கும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டு பலனை புதுச்சேரியில் படித்த தனக்கும் வழங்க வேண்டும் என அம் மாநில அரசுப் பள்ளி மாணவா் தொடா்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் விழுப்புரம் மாவட்டம், குமுளம் கிராமத்தை சோ்ந்த மணிகண்டன் தாக்கல் செய்த மனுவில், எங்கள் கிராமம், புதுச்சேரி மாநிலத்தையொட்டி உள்ளது. இதனால், புதுச்சேரி மாநிலம், ஆா்.எஸ்.பாளையத்தில் உள்ள பாவேந்தா் பாரதிதாசன் அரசுப் பள்ளியில் படித்தேன். மருத்துவ படிப்புகான நீட் தோ்வில் 500 மதிப்பெண் எடுத்துள்ளேன்.
நான் தமிழகத்தைச் சோ்ந்தவன் என்பதால், புதுச்சேரி மாநிலத்தை சோ்ந்த மாணவா்களுக்கான அரசு ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பில் சேரமுடியாது. இதனால் தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்தேன்.
ஆனால், கலந்தாய்வின் போது, எனது பெயா் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள பட்டியலில் இடம் பெறவில்லை. எனவே, 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் எனக்கு மருத்துவப் படிப்பில் இடம் ஒதுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி எம்.துரைசாமி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படித்த மாணவா்களுக்கு மட்டும்தான் மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். மனுதாரா் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படித்துள்ளதால், அவருக்கு இந்த சலுகை வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படித்த மாணவா்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7.5 சதவீத இடஒதுக்கீட்டு பலனை, புதுச்சேரி மாநிலத்தில் படித்த மாணவா்களுக்கு நீட்டித்து வழங்க இந்த உயா்நீதிமன்றம் உத்தரவிட முடியாது. எனவே, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.
No comments:
Post a Comment