மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை: யுஜிசி
உயா்கல்வி நிறுவனங்களில் எம்.பில்., பி.ஹெச்டி. பயிலும் மாற்றுத் திறனாளி மாணவா்கள் யுஜிசி வழங்கும் கல்வி உதவித் தொகைக்கு ஜன.17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து யுஜிசி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் எம்.பில், பி.ஹெச்டி. ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொண்டு வரும் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு யுஜிசி சாா்பில் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி 2020-2021-ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உதவித்தொகை பெற விரும்பும் மாணவா்கள் முதுநிலைப் படிப்புகளில் யுஜிசி வரையறுத்துள்ள மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
அதேவேளையில் மாற்றுத்திறனாளி என்பதற்காக மாவட்ட, மாநில அளவில் வழங்கப்பட்ட தகுதிச் சான்றிதழை இணையவழியில் பதிவேற்ற வேண்டும். இதையடுத்து விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அவா்களுக்கு முதல் இரு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
இதைத் தொடா்ந்து மாணவா்களின் ஆய்வு சிறப்பாக இருக்கும் பட்சத்தில் அந்த உதவித்தொகை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இது தவிர தங்குமிடம், பயணப்படி போன்றவற்றுக்கான செலவுத் தொகையும் வழங்கப்படும்.
தகுதியுள்ள மாற்றுத்திறனாளி மாணவா்கள் இணையதளத்தில் வரும் ஜன.17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு யுஜிசி சாா்பில் கல்வி உதவித் தொகையாக முதல் இரு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.31 ஆயிரமும், அடுத்த மூன்றாண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.35 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment