முறைகேடு தடுக்க புதிய கட்டுப்பாடுகள்: புத்தாண்டு முதல் டி.என்.பி.எஸ்.சி., அமல்
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள், வரும், 3ம் தேதி நடத்தப்படும்,
'குரூப் ~ 1' தேர்வில் இருந்து அமலாகிறது.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டி தேர்வுகளை எழுத விரும்பும் தேர்வர்கள், ஆணையத்தின் விதிகளை பின்பற்ற வேண்டும். காலை, 9:15 மணிக்குள் தேர்வு அறைக்கு வந்து விட வேண்டும். அதன்பின் வருவோருக்கு அனுமதி கிடையாது.
விடைத்தாளில் விடைகளை குறிக்க, கருப்பு நிற பால் பாயின்ட் பேனாவை மட்டும் பயன்படுத்த வேண்டும். பென்சில் மற்றும் வேறு நிற பேனாக்களை பயன்படுத்தக்கூடாது
.விடைத்தாளில் உரிய இடங்களில் கையொப்பமிட்டு, இடது கை பெருவிரல் ரேகையை பதிக்க வேண்டும். அப்போது, விடைத்தாளின் எந்த பகுதியிலும், மை படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
விடை தெரியாவிட்டால், விடைத்தாளில் ஐந்தாவது குறிப்பை கருமையாக்க வேண்டும். ஒவ்வொரு விடைக்கும், எத்தனை வட்டங்கள் கருமையாக்கப்பட்டுள்ளன என, மொத்த எண்ணிக்கையை உரிய கட்டங்களில் நிரப்ப வேண்டும். இந்த எண்ணிக்கை தவறானால், ஐந்து மதிப்பெண்கள் குறைக்கப்படும்.எனவே, பிழையின்றி கவனத்துடன் செயல்பட வேண்டும்.
இந்த செயலை மேற்கொள்ள, தேர்வு நேரம் முடிந்தபின், 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். அதாவது, பகல், 1:00 மணி முதல், 1:15 மணி வரை நேரம் வழங்கப்படும்.
தேர்வர்களின் நலன் மற்றும் தவறுகள் நிகழாமல் தடுக்க, இந்த அம்சங்கள் அறிமுகம் செய்யப் பட்டு உள்ளன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
வரும், 3ம் தேதி, 'குரூப் ~ 1' முதல் நிலை தேர்வு, மாநிலம் முழுதும் நடத்தப்படுகிறது.
இந்த தேர்வு முதல், வருங்காலத்தில் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும், டி.என்.பி.எஸ்.சி.,யின் புதிய நடைமுறைகள் அமலுக்கு வருகின்றன.
No comments:
Post a Comment