23% மதிப்பெண்கள் எடுத்தால் சிபிஎஸ்இ தேர்வில் பாஸ்?- மத்திய அரசு மறுப்பு
சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் 23% மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளியான பதிவுக்கு, மத்திய அரசு சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு காரணமாக மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்க சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மே 4ஆம் தேதி தொடங்கி, ஜூன் 10ஆம் தேதி முடிவடைகின்றன.
செய்முறைத் தேர்வுகள் மார்ச் 1ஆம் தேதி தொடங்குகின்றன. ஜூலை 15ஆம் தேதியன்று தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. எனினும் தேர்வு குறித்த விரிவான கால அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.
வழக்கமாக சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் 33 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஏற்பட்ட கற்றல் இழப்பால், மாணவர்கள் 23% மதிப்பெண்கள் எடுத்தால் போதுமானது என்று மத்தியக் கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளதாக ஒரு பதிவு இணையதளங்களில் வைரலானது. எனினும் இந்தப் பதிவு போலியானது என்று மத்திய அரசு சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகப் பத்திரிகைத் தகவல் அலுவலகம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''இந்த அறிவிப்பு போலியானது. மத்தியக் கல்வி அமைச்சகம் இதுபோன்ற எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை'' என்று தெரிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னதாக பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்படுவதாக வெளியான அறிவிப்புக்கும் பத்திரிகைத் தகவல் அலுவலகம் மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment