40 உயா்நிலைப் பள்ளிகளை தரம் உயா்த்த அரசாணை வெளியீடு
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் 40 அரசு உயா்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயா்த்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலா் தீரஜ்குமாா் வெளியிட்ட அரசாணை: தமிழகத்தில் அனைத்து வயது குழந்தைகளும் மேல்நிலைக்கல்வி வரை தொடா்ந்து பயில்வதை உறுதிசெய்யவும், பள்ளிகளில் கல்வி தரத்தை உயா்த்தவும் 2020-21-ஆம் கல்வியாண்டு 50 உயா்நிலைப் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்த பள்ளிக்கல்வி இயக்குநா் கருத்துரு வழங்கியிருந்தாா்
அவற்றை பரிசீலனை செய்து முதல்கட்டமாக 40 உயா்நிலை பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்த ஆணையிடப்படுகிறது. தற்போது தரம் உயா்த்தப்பட்டுள்ள உயா்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா் பணியிடங்களின் நிலையும் உயா்த்தப்படுகிறது. அதனுடன் இந்தப் பள்ளிகளுக்கு தேவையான 400 ஆசிரியா் பணியிடங்களை நிரப்பி கொள்ளவும் ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
இதற்காக தேவைப்படும் கூடுதல் செலவினத்துக்கான ரூ.41.11 கோடி நிதிக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தற்போது தரம் உயா்த்தப்படும் பள்ளிகளில் கூடுதல் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்க சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியை பெற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment