முடிந்தது கொரோனா தடுப்பூசி ஒத்திகை : விரைவில் அறிக்கை: தடுப்பூசி போடப்படுவது எப்படி? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, January 2, 2021

முடிந்தது கொரோனா தடுப்பூசி ஒத்திகை : விரைவில் அறிக்கை: தடுப்பூசி போடப்படுவது எப்படி?

 முடிந்தது கொரோனா தடுப்பூசி ஒத்திகை : விரைவில் அறிக்கை: தடுப்பூசி போடப்படுவது எப்படி?


கொரோனா தடுப்பூசி ஒத்திகையின் போது ஏற்பட்ட சிரமங்கள் மற்றும் பிரச்னைகள் குறித்து, மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்,'' என, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.


இந்தியாவில், 'கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு' தடுப்பூசிகளின் சோதனை, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில், கொரோனா தடுப்பூசிக்கு, மத்திய அரசு அனுமதி அளிக்க உள்ளது. இதற்காக, நாடு முழுதும், தடுப்பூசிக்கான ஒத்திகை நடந்து வருகிறது.தமிழகத்தில், கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை, சென்னை, திருவள்ளூர், கோவை, திருநெல்வேலி, நீலகிரி ஆகிய ஐந்து மாவட்டங்களில், 17 இடங்களில் நேற்று நடத்தப்பட்டது.அதன்படி, ஒவ்வொரு மையத்திலும், இரண்டு மணி நேரத்தில், 25 நபர்களுக்கு ஒத்திகை பார்க்கப்பட்டது.


சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடந்த ஒத்திகையில், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் பங்கேற்று, ஆய்வு செய்தார்.அப்போது, சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை இணை கமிஷனர் திவ்யதர்ஷினி, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம், மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் உடனிருந்தனர்.


பின், செயலர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:தமிழகத்தில், 17 இடங்களில், கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஒத்திகை, ஒரே நேரத்தில் நடைபெற்றுள்ளது.தடுப்பூசிக்கான ஏற்பாடுகளில், தமிழகம் முன்னிலை வகிக்க வேண்டும் என்ற அடிப்படையில், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கொரோனா தடுப்பூசிக்கு, ஆறு லட்சம் முன்கள பணியாளர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில், ஐந்து லட்சம் முன்கள பணியாளர்களுக்கு, முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்த ஒத்திகை வாயிலாக, தடுப்பூசிக்கான அறையை பெரிதாக்க வேண்டும் என, கண்டறியப்பட்டுள்ளது.


பதிவு செய்தவர்களின் விபரம் மற்றும் 'கோவின்' செயலி முறையாக செயல்படுகிறதா என்பதும், இன்றைய ஒத்திகையில் சரிபார்க்கப்பட்டது.மேலும், ஒத்திகை மட்டுமே என்பதால், தடுப்பூசி போடப்படவில்லை. அதை தவிர, மற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. கொரோனா காலம் என்பதால், உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி, முகாம்கள் நடைபெற்றன.கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்த பின், நான்கு வார இடைவெளியில், இரண்டு முறை தடுப்பூசிகள் போட வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.


தமிழகத்தில், 2.5 கோடி தடுப்பூசியை பதப்படுத்தி வைப்பதற்கான, குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்குகள் தயார் நிலையில் உள்ளன. பாரபட்சமின்றி, அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படும்.ஒத்திகையில், 2,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.ஒத்திகையில் ஏற்பட்ட சிரமங்கள் மற்றும் பிரச்னைகள் குறித்து, மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன்பின், அவர்களின் அறிவுறுத்தல்படி, பிற மாவட்டங்களில் ஒத்திகையை நடத்துவது குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் முடிவு செய்யப்படும்.இவ்வாறு, ராதாகிருஷ்ணன் கூறினார்.


தடுப்பூசி போடப்படுவது எப்படி?




தமிழகத்தில் முதற்கட்டமாக, ஐந்து லட்சம் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. ஏற்கனவே இவர்கள், கோவின் செயலியில், தங்கள் விபரங்களை பதிவு செய்து, தடுப்பூசிக்கான ஒப்புதலை பெற்றிருக்க வேண்டும்.இதில், பொது மக்கள் பதிவு செய்வதற்கான வசதி, தற்போது துவங்கப்படவில்லை.பதிவு செய்த முன்கள பணியாளர்களுக்கு, தடுப்பூசிக்கான நாள், நேரம், இடம் ஆகியவை, மொபைல் போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.


அதன் வாயிலாக, அந்த மையத்திற்கு, 'ஆதார்' அட்டையுடன் செல்ல வேண்டும்.தடுப்பூசி வளாகத்தில், வெப்ப பரிசோதனை செய்த பின், கிருமி நாசினி வாயிலாக, கைகளை சுத்தப்படுத்த வேண்டும்.பின், மொபைல் போன் குறுஞ்செய்தியை, பணியாளர்கள் பார்த்த பின், காத்திருப்பு அறையில், சமூக இடைவெளியுடன் அமர வேண்டும்.


அங்கு, ஒவ்வொருவராக சென்று, டாக்டரிடம், ஆதார் மற்றும் மொபைல் போன் குறுஞ்செய்தியை காட்ட வேண்டும்.அதில் உள்ள பதிவு எண்ணை வைத்து, கோவின் செயலியை பயன்படுத்தி, தடுப்பூசி செலுத்தப்பட்டதாக பதிவு செய்வர். அதை தொடர்ந்து, தடுப்பூசி பயனாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்படும்.


தடுப்பூசி போட்டு கொண்டவர்கள், கண்காணிப்பு அறையில், 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். அவர்களின் ரத்த அழுத்தம் உள்ளிட்ட, சில அடிப்படை பரிசோதனை மேற்கொள்ளப்படும்.அவர்களில் யாருக்காவது மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டால், உடனடியாக சிகிச்சை அளிக்கப்படும். அவ்வாறு எந்த உபாதைகளும் ஏற்படாதவர்கள், 30 நிமிடங்களுக்கு பின் வீட்டிற்கு செல்லலாம்.

No comments:

Post a Comment