'மினி கிளினிக்' வேலை :அரசு புதிய உத்தரவு
'நிரந்தரம் செய்ய கோர மாட்டேன்' என, எழுத்துப்பூர்வமாக உறுதி அளிப்பவருக்கு மட்டுமே, 'அம்மா மினி கிளினிக்' திட்டத்தில், பணி வழங்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில், 2,000 அம்மா மினி கிளினிக் அமைக்கப்பட்டு வருகிறது. இதில், ஒரு டாக்டர், நர்ஸ், மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவ்வாறு நியமிக்கப்படும் நர்ஸ்களிடம், சிலர் பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டு உள்ள அறிவிப்பு:
மினி கிளினிக்குகளில் பணியாற்ற, நர்ஸ்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க வேண்டும். நர்ஸ்கள், அரசு மற்றும் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில், டிப்ளமா முடித்து, நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
பல்நோக்கு பணியாளர்கள், 8ம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். நர்ஸ்களுக்கு, மாதம், 14 ஆயிரம் ரூபாய்; பணியாளர்களுக்கு, 6,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படும்.
இந்த பணியில் சேருவோரிடம், 'இந்த வேலை அவுட் சோர்சிங் வாயிலாக செய்யப்படும், தற்காலிக பணி என்பதை அறிவேன். 'எனவே, இந்த வேலையை, எதிர்காலத்தில், அரசு வேலையாக நிரந்தரம் செய்ய கோர மாட்டேன்' என, எழுதி வாங்கிக் கொள்ள வேண்டும்.
இதைத் தொடர்ந்து, அவர்கள் பணியில் சேர்ந்தது தொடர்பான அறிக்கை, அவர்கள் எழுதி கொடுத்த சான்றிதழின் நகல் ஆகியவற்றை, சுகாதார துறைக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment