814 கணினி ஆசிரியர்கள் தேர்வு முறைகேடு புகார் பற்றி விரிவான விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, February 10, 2021

814 கணினி ஆசிரியர்கள் தேர்வு முறைகேடு புகார் பற்றி விரிவான விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

 814 கணினி ஆசிரியர்கள் தேர்வு முறைகேடு புகார் பற்றி விரிவான விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு


கணினி ஆசிரியர் தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அனைத்து தேர்வு மையங்களிலும் விரிவான விசாரணை நடத்த ஆதிநாதன் குழுவுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்திருக்கிறது. தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கடந்த 2019ம் ஆண்டு உருவாக்கப்பட்ட 814 கணிப்பொறி ஆசிரியர் பணியிடங்களுக்கு 2019ம் ஆண்டு ஜூன் மாதம் ஆன்லைன் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வை நடத்தியது.


 தமிழகம் முழுவதும் 175 மையங்களில் நடைபெற்ற இத்தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், தேர்வு அறைக்குள் விண்ணப்பதாரர்கள் செல்போன் கொண்டுவர அனுமதி அளித்ததாகவும், 3 மணி நேரத்திற்கும் மேல் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டி இப்பணிகளுக்கான தேர்வு பட்டியலை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.


இந்த வழக்குகள் அனைத்தையும் விசாரித்த தனி நீதிபதி பார்த்திபன், 3 தேர்வு மையங்களை தவிர மீதமுள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுதி தேர்வாகியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நடைமுறைகளை மேற்கொள்ள அரசுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தார். அதேசமயம் 3 தேர்வு மையங்களில் நடந்த முறைகேடு குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் ஒருநபர் குழுவையும் அமைத்து உத்தரவிட்டிருந்தார். 


இந்நிலையில் அனைத்து தேர்வு மையங்களிலும் முறைகேடு நடந்துள்ளதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது


அச்சமயம் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்வானது விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படவில்லை என குற்றம்சாட்டினர். தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன், தனி நீதிபதி உத்தரவின்படி 742 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் வழங்கப்பட்டிருப்பதாகவும், ஓய்வுபெற்ற நீதிபதி தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாகவும், அறிக்கையை பார்த்தபின் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார். 


இதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி அமர்வு கணினி ஆசிரியர் தேர்வு முறைகேடு தொடர்பாக அனைத்து மையங்களுக்கும் சேர்ந்து விரிவான விசாரணை  நடத்தி ஏப்ரல் 30ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய நீதியரசர் ஆதிநாதன் குழுவுக்கு உத்தரவிட்டார்.


விசாரணையின் போது அனைத்து தேர்வு மையங்களிலும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை பெறலாம் என்றும் பதிவுகள் இல்லாத பட்சத்தில் தேர்வு எழுதியவர்களை அணுகி விசாரணை நடத்தலாம் என்றும் உத்தரவிட்டனர். 742 ஆசிரியர்கள் நியமனமும் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனவும் நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

No comments:

Post a Comment