இடமாறுதலுக்கு பின்பே கவுன்சிலிங் நடத்த கோரிக்கை
இடமாறுதல் வழங்கிய பிறகு, பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் குறித்த, முறையான அறிவிப்பு தற்போது வரை வெளியிடப்படவில்லை.இந்நிலையில், தொடக்கக்கல்வித்துறை சார்பில், பதவி உயர்வுக்கு தகுதியானோர் பட்டியல், தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேல்நிலைப்பள்ளிகளில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களுக்கு, வரலாறு, பொருளியல் உள்ளிட்ட நான்கு பாடங்களுக்கு மட்டும், சமீபத்தில் பதவி உயர்வு கவுன்சிலிங் நடந்தது.மற்ற பாடங்களுக்கான அறிவிப்பு வெளியாகவில்லை. ஒவ்வொரு நிலையிலும், பதவி உயர்வு வழங்க, பட்டியல் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடக்கின்றன.
இடமாறுதல் வேண்டி பல ஆண்டுகளாக, ஆசிரியர்கள் காத்திருக்கும் நிலையில், இப்போது பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்தினால், விரும்பும் பள்ளிகள் கிடைக்காது என்கின்றனர் ஆசிரியர்கள்.இது குறித்து, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில ஆலோசகரும், கல்வியாளருமான பாலகிருஷ்ணன் கூறுகையில், ''பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தும் போது, இடமாறுதல் வழங்கிய பிறகே, பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்படும்.
தற்போது பதவி உயர்வு வழங்கினால், காலியிடங்கள் நிரப்பப்படும். இடமாறுதலுக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள், சொந்த ஊருக்கு திரும்புவதில், சிரமம் ஏற்படும். சீனியாரிட்டி பட்டியலில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளித்து, இடமாறுதல் வழங்கிய பிறகு உள்ள காலியிடங்களை, பதவி உயர்வால் நிரப்ப வேண்டும்,'' என்றார்.
No comments:
Post a Comment