நீட்' தேர்வு முறைகேட்டில் சிபிசிஐடி எடுத்த நடவடிக்கைகள் என்ன?: நீதிமன்றம் கேள்வி
கேரள மாநிலம் உன்னியாலைச் சேர்ந்த ரஷீத் என்பவர் தாக்கல் செய்த மனு: "நீட்' தேர்வில் முறைகேடு செய்ததாக பல மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையின்போது என் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. இந்த வழக்கில் எனக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. எனது பெயர் தவறுதலாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
"நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக 10 பேரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டாலும், உறுதியான விவரங்கள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த வழக்கில் குற்றவாளிகளாகக் கருதப்படுபவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. எனக்கு ஜாமீன் அளிக்கும்பட்சத்தில், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். மேலும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளைப் பின்பற்றவும் தயாராக உள்ளேன். எனவே, எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் வாதிடுகையில், இந்த வழக்கு ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வருகிறது. மனுதாரரைப் போலீஸôர் காவலில் எடுத்து விசாரித்துவிட்டனர். எனவே மனுதாரருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றார்.
சிபிசிஐடி தரப்பில், "நீட்' தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கிருஷ்ணாசிங் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. எனவே மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, தலைமறைவாக உள்ள கிருஷ்ணாசிங் உள்ளிட்டவர்களை எப்போது கைது செய்வீர்கள் எனக் கேள்வி எழுப்பினர். மேலும் மனுதாரரிடம் விசாரணை நடத்தியதில் கிடைத்த தகவல்கள், ஆவணங்களைத் தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 10} ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
No comments:
Post a Comment