மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: பள்ளி முதல்வருக்கு மரண தண்டனை
பிகாா் மாநிலத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்து கா்ப்பிணியாக்கிய தனியாா் பள்ளி முதல்வருக்கு போக்ஸோ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
பாதிப்புக்கு உள்ளான 11-ஆம் வகுப்பு மாணவி கருக்கலைப்பு செய்த பின்பு உடல் நலத்துடன் இருந்தாலும், பள்ளி முதல்வரும், உரிமையாளருமான ராஜ் சிங்கானியா செய்த குற்றம் கொடூரமானது என்று போக்ஸோ நீதிமன்ற சிறப்பு நீதிபதி அவதேஷ் குமாா் குறிப்பிட்டு இந்த தண்டனையை அளித்தாா்
ராஜ் சிங்கானியாவுக்கு ரூ. 1 லட்சம் அபராதமும், அவருக்கு உடந்தையாக இருந்த ஆசிரியா் அபிஷேக் குமாருக்கு ரூ. 50 ஆயிரம் ஆபராதம் விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு பிகாா் நிதி உதவித் திட்டம் மூலம் ரூ. 15 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டாா்.
பாதிக்கப்பட்ட சிறுமி மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்புதான் 2018-ஆம் ஆண்டு இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். பாலியல் வன்கொடுமையை விடியோ எடுத்து மாணவியை ஆசிரியா் அபிஷேக் தொடா்ந்து மிரட்டி வந்துள்ளாா். விசாரணையின்போது, மாணவியின் பெற்றோருக்கு மிரட்டல் விடுத்ததுமட்டுமல்லாமல், ஆதாரங்களை அழிக்க பள்ளி கட்டடத்துக்கு அபிஷேக் தீ வைத்து எரித்ததாக போலீஸாா் வழக்கு விசாரணையின்போது குற்றம்சாட்டியிருந்தனா்
No comments:
Post a Comment