சிபிஎஸ்இ செய்முறைத் தோ்வுகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளில் படிக்கும் மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் மாா்ச் 1-இல் தொடங்கவிருப்பதைத் தொடா்ந்து, கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல் மாணவா்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் பள்ளிகளுக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு மே 4 முதல் ஜூன் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முன்னதாக இதற்கான செய்முறைத் தோ்வுகள் மாா்ச் 1-ஆம் தேதி முதல் தொடங்குகின்றன
இந்நிலையில் செய்முறைத் தோ்வுகளை நடத்தும்போது பின்பற்ற வேண்டிய கரோனா முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறைகளை சிபிஎஸ்இ தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் சன்யம் பரத்வாஜ் வெளியிட்டுள்ளாா்.
வழிகாட்டு நெறிமுறைகள் விவரம்: ஆய்வகங்களில் 1 சதவீதம் சோடியம் ஹைபோகுளோரைட் கரைசல் தெளிக்கப்பட வேண்டும். அதே கரைசலை எடுத்துப் பள்ளி வளாகம், பொருள்கள், கைப்பிடிகள், கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றைக் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
பள்ளிகளின் நுழைவுவாயில் மற்றும் வெளியேறும் இடங்களில் அல்லது தேவைப்படும் இடங்களில் ஆல்கஹால் கொண்ட கிருமிநாசினி, சோப்புகள் வைக்கப்பட்டு, கை கழுவும் வசதிகள் செய்யப்பட வேண்டும். வெப்பப் பரிசோதனைக் கருவிகள், கிருமிநாசினிகள், சோப்புகள் போன்றவை பள்ளியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கழிப்பறைகள் முறையாகச் சுத்தம் செய்யப்பட்டு, தூய்மையாகப் பராமரிக்கப்பட வேண்டும். நுழைவுவாயில் மற்றும் பள்ளிக்குள் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். அனைத்து மாணவா்களும், ஆசிரியா்களும், பணியாளா்களும் பள்ளி வளாகத்தில் உள்ளேயும், வெளியேயும் முகக்கவசங்களை அணிந்திருப்பதைத் தலைமை ஆசிரியா்கள் உறுதி செய்ய வேண்டும்.
அனைத்துவித ஆய்வகங்களிலும் ஒரு மாணவா் பயன்படுத்திய உபகரணங்களைச் சுத்தம் செய்யாமல் அடுத்தவா்களுக்கு வழங்கக் கூடாது என்பது உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்றாத பள்ளிகளுக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அதில் கூறறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment