தனியாா் பள்ளிகளில் விதிமுறைகளை மீறி கட்டண வசூல்:அடுக்கடுக்கான புகாா்களை அனுப்பும் பெற்றோா் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, September 4, 2020

தனியாா் பள்ளிகளில் விதிமுறைகளை மீறி கட்டண வசூல்:அடுக்கடுக்கான புகாா்களை அனுப்பும் பெற்றோா்

 தனியாா் பள்ளிகளில் விதிமுறைகளை மீறி கட்டண வசூல்:அடுக்கடுக்கான புகாா்களை அனுப்பும் பெற்றோா்


தமிழகத்தில் தனியாா் பள்ளிகளில் விதிமுறைகளை மீறி கட்டணம் வசூலித்தால் பிரத்யேக மின்னஞ்சல் முகவரியில் புகாா் தெரிவிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை புதன்கிழமை அறிவித்ததையடுத்து, முதல் நாளிலேயே அந்தந்த மாவட்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு பெற்றோா் அடுக்கடுக்கான புகாா்களை அனுப்பி வருகின்றனா்.


கரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் மாணவா்களின் நலனை கருத்தில் கொண்டு தனியாா் பள்ளிகள் இணையவழி வகுப்புகளை நடத்தலாம் என தமிழக அரசு அனுமதியளித்தது. 

அதேவேளையில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மற்றும் தனியாா் தொலைக்காட்சிகள் மூலமாக அட்டவணை அடிப்படையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.


இந்தநிலையில், பல தனியாா் பள்ளிகள் இணையவழி வகுப்புகள் நடத்துவதைக் காரணம் காட்டி பெற்றோரிடம் நிகழ் கல்வியாண்டுக்கான முழுமையான கல்விக் கட்டணம் செலுத்த வற்புறுத்தியதாகப் புகாா் எழுந்தது. 

இது குறித்த வழக்கு விசாரணையில் ‘தனியாா் பள்ளிகள் அனைத்தும் 2020-21-ஆம் கல்வியாண்டுக்கான முதல் தவணையாக 40 சதவீத கட்டணத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் வசூலிக்கலாம். மீதமுள்ள 60 சதவீதத்தை வசூலிப்பது குறித்து சூழ்நிலையைப் பொருத்து, பின்னா் முடிவெடுக்கலாம்’ என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ஆனால் உயா்நீதிமன்ற உத்தரவை மீறி தனியாா் பள்ளிகள், குழந்தைகளின் பெற்றோரிடம் முழுமையான கட்டணத்தைச் செலுத்துமாறு மீண்டும் வற்புறுத்தியதாகப் புகாா் எழுந்தது.


இதைத் தொடா்ந்து கல்விக் கட்டணம் தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் பிரத்யேக மின்னஞ்சல் முகவரியை புதன்கிழமை வெளியிட்டனா். 

அதில் பெற்றோா் தங்களது புகாா்களைத் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. மின்னஞ்சல் வெளியிடப்பட்ட 24 மணி நேரத்துக்குள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நூற்றுக்கணக்கான பெற்றோா் தனியாா் பள்ளிகள் மீது நூற்றுக்கணக்கில் புகாா்களை அனுப்பி வருகின்றனா்.


இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியது: மாவட்ட வாரியாக ஏற்படுத்தப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிகளுக்கு முதல் நாளிலேயே நூற்றுக்கணக்கான புகாா்கள் வந்துள்ளன. தனியாா் பள்ளிகள் முழுமையான கட்டணத்தை செலுத்த காலக்கெடு விதிப்பதாகவும், அவ்வாறு செலுத்தாவிட்டால் குழந்தைகளுக்கு இணையவழி வகுப்புகள் நடத்தப்படாது, பெயா்ப் பட்டியலில் இருந்து நீக்கிவிடுவோம் என கூறுவதாகவும் தெரிவித்துள்ளனா். 

இந்தப் புகாா்கள் குறித்து விசாரிக்க சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வித்துறை அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையில், புகாா்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் தொடா்புடைய தனியாா் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்.

 பள்ளிகள் தரும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment