ஒருநாள் கலெக்டராக பிளஸ் 2 மாணவி பொறுப்பேற்பு
திருமலை: அனந்தப்பூர் மாவட்டத்தில் ஒருநாள் கலெக்டராக பிளஸ் 2 மாணவி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். 63 மண்டலங்களில் மாணவிகளே தாசில்தாராக பணியாற்றினர்
. சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, ஆந்திராவில் முதன்முறையாக அனந்தப்பூர் மாவட்டத்தில் கலெக்டர் காந்தம் சந்திரா செயல்படுத்திய புதுமையான திட்டம் மாணவிகள் மத்தியில் புது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவிகளை குலுக்கல் முறையில் தேர்வு செய்து ஒருநாள் அதிகாரிகளாக தங்கள் கடமைகளை செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது.
அவ்வாறு தேர்வு செய்த மாணவிகளில் ஒருவரான, கார்லடின் மண்டலம், கஸ்தூர்பா அரசு பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவி ஷ்ராவனி ஒருநாள் கலெக்டராக நேற்று பதவியேற்றார்.
மாணவி ஷ்ராவனியை, கலெக்டர் காந்தம் சந்திரா, இணை கலெக்டர் நிஷாந்த்குமார் மற்றும் மாவட்ட அதிகாரிகள் அழைத்துச்சென்று கலெக்டர் நாற்காலியில் அமர வைத்தனர்.
தொடர்ந்து, டிஷா சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்கும் ஒரு கோப்பில் ஒரு நாள் கலெக்டர் ஷ்ராவனி கையெழுத்திட்டார்.
ஒரு நாள் இணை கலெக்டராக மதுஸ்ரீ என்ற மாணவி பொறுப்பேற்றார். அதேபோல், அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள 63 மண்டலங்களில் பள்ளி மாணவிகள் ஒரு நாள் தாசில்தாராக பணியாற்றினர்.
மேலும், பல மாணவிகள் இணை கலெக்டர், ஆர்டிஓ, தாசில்தார் மற்றும் தகவல் துறை, வட்ட வழங்கல் மற்றும் பிற துறை அலுவலர்களின் பொறுப்புகளை ஏற்றனர்.
பெண்கள் இருந்தால் நீதி கிடைக்கும்
இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், ‘பெரும்பாலான பொறுப்புகளில் பெண்கள் இருந்தால் மக்களுக்கு சரியான நீதி கிடைக்கும்.
எனவே, தான் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்தேன். மாணவிகள் தங்கள் இலக்கை தேர்வு செய்து விடாமுயற்சியுடன் படித்து உயர் பதவியை அடைய இதுபோன்ற நிகழ்ச்சி ஊக்குவிக்க வடிவமைக்கப்பட்டது.
இதேபோல், மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் தேர்வு செய்து, அங்கு படிக்கும் மாணவிகளின் பெயர்கள் குலுக்கல் மூலம் தேர்வு செய்து ஒருநாள் அதிகாரியாக நியமிக்கப்பட உள்ளனர்’ என்றார்.
Super
ReplyDeleteSalute sister
ReplyDeleteநல்ல ஊக்குவிப்பு முயற்சி
ReplyDelete