மத்தியப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு
மத்தியப் பல்கலைக்கழகங்களில், புதிய மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வின் முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் நீலக்குடி கிராமத்தில் மத்தியப் பல்கலைக்கழகம் உள்ளது. இதேபோன்று இந்தியா முழுவதும் 18 பல்கலைக்கழகங்கள் உள்ளன.
இந்தப் பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள் மற்றும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பட்டப்படிப்புகள் ஆகியவற்றுக்கு, முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்றது.
இந்தத் தேர்வுகள் தமிழ்நாட்டில் திருவாரூரில் நான்கு மையங்களிலும், சென்னை, கோயம்புத்தூர், கடலூர், மதுரை, நாகர்கோயில், திருச்சி உள்ளிட்ட மையங்களிலும் நடைபெற்றது. இதேபோன்று நாடு முழுவதும் 141 மையங்களில் நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான மாணவர்கள் முதலாம் ஆண்டுச் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை எழுதினர். இந்த நுழைவுத் தேர்வுகளுக்கான முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
இதுபற்றி திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆ.இரகுபதி தெரிவித்ததாவது,
இந்த முடிவுகள் சம்பந்தப்பட்ட அறிவிக்கை, திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்திற்கு வரப் பெற்ற பின்னர், நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான இணையவழி நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி பற்றி விரைவில் அறிவிக்கப்படும்.
மத்தியப் பல்கலைக்கழகத்தின் இணையத்தில் சென்று, சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் மொத்தமுள்ள 794 மாணவர் சேர்க்கைக்கான தேர்வு நடைபெற்றதாகவும், தமிழகத் தேர்வு மையங்களில் நடைபெற்ற நுழைவுத்தேர்வில் 6,400 மாணவர்கள் கலந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment