தேசிய பட்டாம்பூச்சியாக தேர்வு செய்ய இதனை பரிந்துரை செய்துள்ளனர்
தேசிய பட்டாம்பூச்சி தேர்வுக்கு, 'கிருஷ்ண மயில்' உட்பட ஏழு பட்டாம்பூச்சிகளை, ஆர்வலர்கள் பரிந்துரைத்துள்ளனர்.உலகின் ஒரு சில நாடுகள், தங்கள் நாட்டுக்கே உரிய பட்டாம்பூச்சியை தேர்வு செய்து, தேசிய பட்டாம்பூச்சியாக அறிவித்துள்ளன.
நம் நாட்டிலும் தேசிய பட்டாம்பூச்சியை தேர்வு செய்து அறிவித்தால், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும் என்று கருதி, 50 தன்னார்வ அமைப்புகள் முயற்சி மேற்கொண்டுள்ளன.
இதற்கென ஆர்வலர்கள் முன்மொழிந்த, பைவ் பார் ஸ்வார்ட்டெய்ல், இன்டியன் ஜெசிபெல், இன்டியன் நவாப், கிருஷ்ண பீகாக், ஆரஞ்ச் ஓக்லீப், நார்த்தன் ஜங்கிள்குயின், யெல்லோ கோர்கன் ஆகிய ஏழு வகை பட்டாம்பூச்சிகள் ஆய்வில் உள்ளன.இவற்றில், 'கிருஷ்ண பீகாக்' எனப்படும் கிருஷ்ண மயில் பட்டாம்பூச்சி தேர்வாக வாய்ப்புள்ளதாக, கோவையை சேர்ந்த பட்டாம்பூச்சி ஆர்வலர் மோகன் பிரசாத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், ''இமயமலை பகுதியில் காணப்படும் கிருஷ்ண மயில் பட்டாம்பூச்சி காண்போரை கவர்ந்திழுக்கும் வகையில், அழகிய நீலம், பச்சை நிற இறகுகளை கொண்டுள்ளது.
நீண்ட இறகும், வாலும் கொண்ட இந்த பட்டாம்பூச்சி, தேசிய பட்டாம்பூச்சியாக அறிவிக்கப்படுவதற்கு அனைத்து தகுதிகளையும் கொண்டது. இதை, தேசிய பட்டாம்பூச்சியாக அறிவிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்,'' என்றார்.
No comments:
Post a Comment