புதிய மருத்துவ கல்லூரியில் பணிபுரிய விருப்பம் கேட்பு
அரசு மருத்துவ கல்லூரியில் பணிபுரிய, மருத்துவ பணிகள் துறையின் கீழ், பணிபுரிபவர்களிடம் விருப்பம் கோரப்பட்டுள்ளது.
ஊட்டி அருகே கோல்ப் கிளப் பகுதியில், வனத்துறைக்கு சொந்தமான, 25 ஏக்கர், கால்நடை துறைக்கு சொந்தமான, 15 ஏக்கர், என, மொத்தம், 40 ஏக்கரில் மருத்துவ கல்லுாரி, 447 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வருகிறது.
இந்த மருத்துவ கல்லுாரி மூலம், 150 வீதம் இடங்கள் கிடைக்கிறது. அடுத்தாண்டில், மாணவர் சேர்க்கை நடைபெறுவதால், கட்டுமான பணி வேகமாக நடந்து வருகிறது.
இதற்கிடையே, மருத்துவ கல்லுாரிகளில் பணிபுரிய, பேராசிரியர், டாக்டர் செவிலியர், மருத்துவ பணியாளர் உள்ளிட்டோர், இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி, நிரந்தர மற்றும் 'அவுட் சோர்சிங்' முறையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி, இங்கு பணிபுரிய மருத்துவ பணிகள் துறையின் கீழ் பணிபுரியும் டாக்டர், செவிலியர் மற்றும் மருத்துவ பணியாளர்களிடம் விருப்பம் கேட்கப்பட்டு வருகிறது.
மருத்துவ கல்லுாரி டீன் ரவீந்திரன் கூறுகையில்,''புதிதாக அமைக்கப்படும் மருத்துவ கல்லுாரியில், மருத்துவம் சார்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பு கொண்டு வரப்படும். பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை என, அனைத்து துறைகளும் இருக்கும்.
இதற்கான பணியாளர் நியமனம் செய்யப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக மருத்துவப்பணிகள் கட்டுப்பாட்டில் உள்ள வர்களின் விருப்பம் கேட்கப்பட்டு வருகிறது,'' என்றார்.
No comments:
Post a Comment