கரோனா தடுப்பூசியில் முதலிடம் மற்றும் கடைசி இடத்தில் உள்ள மாநிலங்கள்
நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் மற்ற மாநிலங்களை விட கர்நாடகம் அதிகளவில் தடுப்பூசி செலுத்தி முதல் இடத்தில் உள்ளது.
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கி 5 நாள்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை மொத்தம் 7.86 லட்சம் மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நாடு முழுவதும் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதன்கிழமை மாலை 6 மணி வரை 1,12,007 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அவர்களில் 82 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 7,86,842 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அதேவேளையில், கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் தமிழகம், புதுச்சேரி மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் கடைசி இடத்தில் இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாநிலங்களில் இதுவரை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட முறையே 34.9%, 34.6% மற்றும் 27.6% என்ற அளவில்தான் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் இது குறித்துப் பேசுகையில், 50 சதவீதத்துக்கும் குறைவான அளவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்துள்ள மாநிலங்களுடன் தொடர்ந்து பேசி, அங்குள்ள சிக்கல்கள் மற்றும் கரோனா தடுப்பூசி மீதான அச்சம் குறித்த பிரச்னைகளை தீர்க்க தேவையான நடவடிக்கைகளை ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.
மேலும், இது ஒன்றும் புதிய பிரச்னையல்ல, ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து மற்றும் அம்மை தடுப்பூசி மருந்துகள் செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டபோதும், பொதுமக்களுக்கு இது தொடர்பாக அச்சம் இருந்தது.
இது தொடர்பாக விளக்கம் அளித்து, தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினால், தடுப்பூசி மீதான அச்சநிலை மாறும் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment