நுழைவுத்தேர்வு பயிற்சி மையங்கள் துவக்க நடவடிக்கை என்ன உயர்நீதிமன்றம் கேள்வி
அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வுக்குரிய பயிற்சி மையங்களை அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஏற்படுத்த தாக்கலான வழக்கில், இதில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகள் தரப்பில் தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
கொடைக்கானல் வழக்கறிஞர் மனோஜ் இமானுவேல் தாக்கல் செய்த பொதுநல மனு:அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' இலவச பயிற்சி அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சட்டம், விவசாயம் மற்றும் அது சார்ந்த அறிவியல், கட்டடக் கலை, சார்ட்டர்டு அக்கவுண்டன்ட், பேஷன் டிசைனிங், விருந்தோம்பல் மற்றும் ஓட்டல் நிர்வாகம், கடல்சார் படிப்புகளுக்கு தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
அதற்கு வழிகாட்ட பயிற்சி மையங்கள் இல்லை.அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வுக்குரிய பயிற்சி மையங்களை தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும்.
நுழைவுத் தேர்வுக்குரிய ஆன்லைன் விபரங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனோஜ் இமானுவேல் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு: இவ்விவகாரத்தில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகள் தரப்பில் விபரம் பெற்று அதன் வழக்கறிஞர்கள் பிப்.,4 ல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.
No comments:
Post a Comment