'டிஜிட்டல்' பல்கலை கேரளாவில் துவக்கம்
திருவனந்தபுரம் : நாட்டின் முதல், 'டிஜிட்டல்' பல்கலைக்கழகம், கேரளாவில் நேற்று துவக்கப்பட்டது.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், மாநில அரசால், ஐ.ஐ.ஐ.டி.எம்.கே., எனப்படும், இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனம் மற்றும் கேரள மேலாண்மை பல்கலைக்கழகம் துவக்கப்பட்டது.
பெயர் மாற்றம் : இந்தப் பல்கலைக்கழகத்தை மேம்படுத்தி, 'கேரள டிஜிட்டல் அறிவியல், கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்' என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
நாட்டின் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகமான இதை, கவர்னர் ஆரீப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில், கவர்னர் ஆரீப் முகமது கான் பேசுகையில், ''புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் தான், இந்தப் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டுள்ளது,'' என்றார்.
நடவடிக்கை : முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், ''நாட்டின் முதல் டிஜிட்டல் பல்கலை துவக்கப்பட்டதன் மூலம், இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் அதிகளவில் கிடைக்கும். ''சமூகத்தின் பல்வேறு துறைகளிலும், தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரிக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என்றார்.
No comments:
Post a Comment