சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: பெற்றோரை இழந்த சிறுமியின் கல்விக்கட்டணத்தை ஏற்றது எஸ்ஆர்எம் கல்விக் குழுமம்
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் பெற்றோரை இழந்த சிறுமி நந்தினியின் கல்விக்கட்டணம் முழுவதையும் எஸ்ஆர்எம் கல்விக் குழுமம் ஏற்றுக்கொள்ளும் என பாரிவேந்தர் எம்பி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு மீண்டும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன். குறிப்பாக, இந்த பட்டாசு ஆலை விபத்தில் பலியான பாக்கியராஜ் - செல்வி தம்பதியரின் மகள் நளினி என்கிற சிறுமியின் அழுகையும், நிர்கதியாக நின்று கலங்கும் சூழ்நிலையும் நம் நெஞ்சை நெகிழச் செய்கின்றது.
சிறுமி நந்தினியின் எதிர்காலம் பட்டாசு ஆலை விபத்தில் கருகிப்போன அவள் பெற்றோரின் உடலைப் போலவே கருகிப் போகாதிருக்க வேண்டுமானால், நந்தினியின் எதிர்காலம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்.
எனவே, பெற்றோரை இழந்து தவிக்கும் சிறுமி நந்தினியின் தற்போதைய பள்ளி வகுப்பு முதல், கல்லூரிப் படிப்பு வரை அவரின் கல்விச் செலவு முழுவதையும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக கல்விக் குழுமம் ஏற்றுக்கொள்ளும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும், இதுகுறித்து உடனடியாக நந்தினியின் உறவினர்களிடம் தொடர்புகொண்டு இத்தகவலை தெரிவித்து, சிறுமி நந்தினியின் எதிர்காலம் குறித்த அச்ச உணர்வினை நீக்குகின்ற வகையில் எஸ்ஆர்எம் பல்கலைக் கழகம் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment