தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்த இடைக்கால தடை: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்த தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கிடாதிருக்கை அரசுபள்ளி தலைமையாசிரியர் ஜேக்கப் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
பதவி உயர்வில் தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டு சொந்த மாவட்டமான நெல்லையில் காலியிடம் இல்லாததால் இங்கு இடமாற்றம் செய்யப்பட்டேன். 2020ம் ஆண்டுக்கு நடக்க வேண்டிய பொது மாறுதல் கலந்தாய்வு கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது. தற்போது பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்துவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தினால் பலருக்கு உரிய இடம் கிடைக்காத நிலை ஏற்படும். எனவே பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை 24-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். கலந்தாய்வு இன்று நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment